Friday, June 28, 2013

அன்றொரு நாள்: ஜூன் 29




அன்றொரு நாள்: ஜூன் 29
                                                                                                        

இங்கு அடுத்த தெரு; காவண்டிஷ் ரோடு. இதை கடக்கும் போதெல்லாம் சென்னையை நினைத்துக்கொள்வேன். அங்கு தான் 1950 களில் மாணவனாக இருப்பது நல்லதொரு கொடுப்பினை, பிரபலங்களுடன் அநாயசமாக பழக. அணுசக்தி விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ரிலிருந்து நம் நாட்டு பிரசன்ன சந்திர மஹலானோபிஸ் வரை. விசாலமான அறிவு தேட்டலுக்கும், தன்னம்பிக்கைக்கும் உரம் போட்ட மாதிரி. கேம்பிரிட்ஜில் உள்ள காவண்டிஷ் விஞ்ஞான பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்ய விழைந்தாலும், இந்தியாவுக்கு திரும்பிய பிரசன்ன சந்திர மஹலானோபிஸ் அவர்களின் ஜென்மதினம், இன்று (ஜூன் 29, 1893). மறைந்த தினம்: 28 June 1972. அவரது பேச்சை சென்னை செர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா மன்றத்தில் கேட்டு, கேள்விகள் கேட்டு துளைத்திருக்கிறேன். மின் தமிழில் ‘தடால், தடால்’ என்று சிலரால் விதிக்கப்படும் ‘தடா’ போல் அங்கு கிடையாது. யாரும் எதையும், குடைந்து, குடைந்து, கேட்கலாம். ஸர்.சீ.பி. ராமஸ்வாமி அய்யர் கூட எங்களிடம் மாட்டிக்கொண்டது உண்டு. இது நிற்க.

விஞ்ஞான ஆராய்ச்சியிலும், ஆசிரியப்பணியிலும் ஆழ்ந்திருந்த மஹலானோபிஸ் அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பம், இந்தியாவுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. சிறிய விஷயமாகப் படலாம், அவர் கார்ல் பியர்சனின் புள்ளியியல் நூலால் கவரப்பட்டது. நாம் எல்லா இயல்களையும் கேலி செய்கிறோம். அரசியல் ஒரு பச்சோந்தி; பொருளாதாரம் என்று ஒன்று இல்லை (பேராசிரியர் ஸ்டீஃபன் லீக்காக்), புள்ளியியல் பொய் சாத்திரம், இத்யாதி. கொஞ்சம் உண்மையுடன், அதீத பொய்கலப்பு. முறையாக கற்றுக்கொண்ட புள்ளியியல், கடந்த காலத்தை கணித்து வருங்காலத்தை ஆருடம் கூறும் திறனுடையது. 1920 வரை, புள்ளியியல் பற்றி இந்தியாவில் அதிகம் தெரியாது. இவரின் வாழ்க்கையின் திருப்பம், இந்தியாவுக்கு புள்ளியியல் ஆய்வுக்கு வழி வகுத்தது. பிரதமர் நேருவும், நிதி அமைச்சர் சி.டி. தேஷ்முக் அவர்களும் ஊக்கமளிக்க, மஹலானோபிஸ் இந்தியாவின் புள்ளியியல் மன்றத்தை 1932ல் தோற்றுவித்தார். வகுப்புக்கு பத்து மாணவர்கள்; எல்லாரும் ரத்தினங்களாக, பிற்காலம் மிளிர்ந்தனர். வருகை தந்து, அந்த மன்றத்தின் மேன்மையை கூட்டினவர்களில், விஞ்ஞானி ஜே.பீ.எஸ். ஹால்டேன் ஒருவர். இந்திய குடியுரிமையை கேட்டு வாங்கிக்கொண்ட ஆங்கிலேயர். அவர் எனக்கு எழுதிய மடலொன்றை, இத்தனை வருடம் காப்பிற்றினேன். அது அவருடைய ஸ்தாபனத்திற்கு நன்கொடையாகக் கொடுக்கப்படும். அதில் தன் மனைவியை ‘வைஷ்ணவி’ என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர், பேராசிரியர் நார்பெர்ட் வீனர். அவரை போல மின்னலை விட பன்மடங்கு வேகத்தில் சிந்திக்கும் திறனை நான் வேறு எங்கும் கண்டதில்லை; கேட்டதில்லை.

‘மஹலானோபிஸ் தொலைவு’ (Mahalanobis Distance) என்ற விஞ்ஞானத்தத்துவம் ஒன்று உண்டு. புள்ளியியல் வரமுறைகள் மூலமாக, சேகரிக்கப்பட்ட தகவல்களிலிருந்து நம்பகத்தன்மை குறையாத ஊகங்களை அளிக்கவும், பட்டியல்கள் தயாரிக்கவும் இது உதவியது. மேலும், இவரும், இவரது மாணவர்களும், பலதரப்பட்ட புள்ளியியல் ஆய்வுகள் செய்து, இந்தியாவுக்கு புகழ் ஈட்டினர்.

1922ல் வங்காளத்தில் ஒரு வெள்ளம். பொறியாளர்கள் மிகவும் செலவு செய்து கட்டும் தடை அணைகள் பற்றி திட்டமிட, மஹலானோபிஸ் 50 வருட மழை, வெள்ளம் ஆகியவற்றை அலசி, ஒரு எளிய திட்டம் வகுத்தார். அதன் அடிப்படை, அக்காலம் மேல்நாடுகளிலேயே பிரபலம் ஆகாத Operation Research. 1925ல் வேளாண்மைத்துறையில் புதிய சாதனைகளை படைத்தார். இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம் 1956-61 மிக சிறந்தது. அதை வகுத்தவர், இவர் தான். அதற்கு பெயரே மஹலானோபிஸ் மாடல். அதனுடைய அடித்தளம்: சுய நம்பிக்கை, தீர்க்க தரிசனம், வளரும் மாபெரும் தொழிற்கூடங்கள், அரசு தொழிற்கூடங்கள், திட்டமிட்ட மேன்மை வளர்ச்சி. பேராசிரியர் ஸுரேஷ் டெண்டுல்கர் சொல்வது போல, இந்தியாவின் நாடு தழுவிய சர்வேக்கள், ஆதாரம் உள்ள அடிப்படை புள்ளி விபரங்கள் ஆகியவற்றின் தந்தை என்று பேராசிரியர் பத்மவிபூஷன் பிரசன்ன சந்திர மஹலானோபிஸ் அவர்களை, அவரது ஜென்மதினத்தன்று போற்றிடுவோம்.
இன்னம்பூரான்
29 06 2011
உசாத்துணை:
Image Credit: http://theindianeconomist.com/wp-content/uploads/et_temp/PCMahalanobisWithJLNehru1946-257521_186x186.jpg



Gita Sambasivam

அரியதும், புதியதுமான செய்திப் பகிர்வுக்கு நன்றி ஐயா.  இந்த விஷயம் குறித்த அறிவு முற்றிலும் இல்லாததால் இதைக் குறித்துக் கருத்துக் கூற இயலாது.  ஆனாலும் புதிய தகவல்களுக்கு மிக்க நன்றி.  பிரசன்ன சந்திர மஹாலானோபிஸ் என்ற பெயரையே இன்று தான் கேள்விப் படுகிறேன்.அன்னாருக்கு அஞ்சலி.




7/1/11




Subashini Tremmel

பற்பல அலைச்சல்களுக்கிடையில் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. இருப்பினும் சேர்த்து வைத்து இன்று சிலவற்றை வாசித்தேன். வரலாற்றில் ஆர்வம் உள்ள எனக்கு இந்த தொடர் மிகவும் பிடித்திருக்கின்றது.  

குறிப்பு: பவளா மரபுவிக்கியில் இந்த அரிய தொடரை தொடர்ந்து இனைத்து வருகின்றார்.  அன்றொரு நாள் என்ற பகுப்பில் இக்கட்டுரைகள் உள்ளன.

-சுபா
2011/6/28 Innamburan Innamburan <innamburan@gmail.com>
மிக்க மகிழ்ச்சி, ஸுபாஷிணி. எனக்கும் படிக்க, படிக்க, ஆர்வம் கூடுகிறது. மொழியாக்கச்சுவை கூடுகிறது. சில சமயங்களில், நான் ஆழ்ந்து போய்விடுகிறேன். அடுத்து வரும் தலை மாந்தன் என்னை ரொம்பவும் தான் படுத்தி விட்டான், ஜான்ஸி ராணியை போல.
இன்னம்பூரான்

No comments:

Post a Comment